Wednesday, September 29, 2010

முதல் அமெரிக்க பயணம்

என் கணவர் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். நான் குடும்ப தலைவி. எங்களுக்கு நான்கு ஆண் பிள்ளைகளும் இரண்டு பெண் பிள்ளைகளும் உள்ளனர். கடவுளருளால் அனைவரும்  நன்கு படித்து நல்ல நிலையில் உள்ளனர்.
                             எங்கள் மகன்கள் மூவரும் 1998-99 இல் ஒருவர் பின் ஒருவராக அமெரிக்காவில் கணினி துறையில் வேலை பெற்று சென்றுவிட்டார்கள்.
2000 வருடம் ஏப்ரல் மாதம் எங்களை அழைக்க தேவையான ஏற்பாடுகளை செய்தார்கள். மே இரண்டாம்  தேதி நாங்கள் சென்னையில் புறப்படுவதாக ஏற்பாடு.
                            இரண்டாம் தேதி புதன் இரவு எட்டு மணிக்கு உறவினர் புடைசூழ விமான நிலையம் வந்தடைந்தோம். பாஸ் வாங்கிகொண்டு எல்லோரும் உள்ளே வந்தார்கள். எல்லா செக்கிங்கும் முடிந்து நாங்கள் வெளியே வந்து எல்லோரிடமும் விடை பெற்று கொண்டு உள்ளே போனோம். சரியாக 11 : 50 க்கு உள்ளே போகலாம் என்றார்கள். நாங்கள் முதல் முறை விமான பயணம் என்பதால் எதோ ஏணி வழியே  ஏறி விமானத்தின் உள்ளே செல்வோம் என்று எண்ணி இருந்தோம். ஒரு வராந்தா வழியாக சென்றால் நேராக விமானத்தின்   உள் செல்லும் இடம் வந்துவிட்டது. இடம் கண்டுபிடித்து உட்காரவும் பெல்ட்டை அணிந்து கொள்ளவும் ஏற்கனவே அறிமுகமான ஒருவர் உதவினார். விமானம் கிளம்பியதே தெரியவில்லை. ரன்வேயில்  ஓடி முடிந்ததும் லிப்டில்  ஏறும்போது உண்டாகும் லேசான குலுக்கல்தான் இருந்தது.
             விமானத்தில் முதலில் ஆரஞ்சு பழரசமும் பின்பு இரண்டு மணிக்கு சாப்பாடும்  கொடுத்தார்கள். சாப்பிட்டு முடிந்த்ததும் சற்று கண் அயர்ந்தோம்.
ஆறரை மணிக்கெல்லாம் கோலாலம்பூர் சென்று அடைந்தோம்.
எங்கள் கைகடிகாரத்தை திருத்தி வைத்துகொண்டோம். கோலாலம்பூர் விமான நிலையம் ரொம்ப ரொம்ப அழகு. பிரம்மாண்டம், சில  மணி நேரம் ஆசைதீர சுற்றி வந்தோம். ஐந்து  டாலர்கள் கொடுத்து இரண்டு காபி குடித்தோம். ஒன்பது மணிக்கு விமானத்துக்கு திரும்பினோம். இது பெரிய போயிங் விமானம் இங்கு மதிய சாப்பாடு தந்தார்கள். மாலை நாலரைக்கு Tokyo  சென்றடைந்தோம். வெளியில் போக அனுமதி கிடையாது. லவுஞ்சிலேயே அமர்ந்திருந்தோம். கோலாலம்பூர் விமானநிலையத்துடன் ஒப்பிடும்போது இது ஒன்றுமே இல்லை. ஆனால் நம் ஊர் பஸ் நிலையம் போல் நிமிடத்து ஒரு விமானம் இறங்குவதும் மேலே புறப்படுவதும் கண்கொள்ளா காட்சி. மறுபடி விமானத்திற்கு செல்ல வேண்டிய இடத்துக்கு போக அந்த தம்பதிகள் உதவினார்கள். ஆனால் யார் உதவியும் இன்றி எந்த இடத்துக்கும் போகலாம். வழியை படங்கள் மூலம் போட்டிருக்கிறார்கள். படிப்பறிவு இல்லாதவர்கள்  கூட சற்று கவனமாக இருந்தால் தனியாக எந்த இடத்துக்கும்  செல்லலாம்.
                                                   ஆறு மணிக்கு விமானம் புறப்பட்டது. இரவு உணவுக்கு முன்  அடிக்கடி குடிக்க எதாவது கொடுத்து கொண்டே இருந்தார்கள். சரியாக பத்து மணிக்கு ஜன்னல்களை சாத்திவிட்டார்கள். பெரிய விளக்குகளை அணைத்துவிட்டார்கள். அவரவர் இருக்கைக்கு மேல் விளக்கு மற்றும் குளிரூட்டும் வசதி உள்ளது. இரவா பகலா பொழுது விடிந்துவிட்டதா ஒன்றும் தெரிய வில்லை. பசிபிக் கடல் மீது நீண்ட பயணம். பொழு விடிந்தது என்று அவர்களாக வந்து ஜன்னல் கதவுகளை திறந்துவிட்டு காலை காபி தந்தார்கள் பிறகு காலை உணவு தந்தார்கள்.
                                                 3  ஆம்  தேதி  வியாழன் பகல் ஒரு மணிக்கு  Los  Angeles வந்தடைந்தோம் விமானத்தில் பயணிக்கும் போது எந்த பயமும் தெரியவில்லை வீட்டில் சோபாவில் உட்கார்ந்து இருப்பதுபோல் தான் இருந்த்தது, தரையை தொடும் போதுதான் சற்று தட தட  என்ற ஓசையுடன்   நம்மை அறியாமல் தூக்கி போடுகிறது.
செக்கிங் போது  எதற்கு வந்து உள்ளீர்கள் என்று கேட்டார்கள். பிள்ளையை பார்க்க மற்றும் சுற்றிபார்க்க என்றோம். சரி என்று 6 மாதங்களுக்கு விசா கொடுத்து விட்டார்கள். இதுவரை உதவிய தம்பதியருக்கு நன்றி கூறி விடை பெற்றோம். பெட்டிகளை எடுக்க பலரும் உதவினார்கள். முதியவர்கள்  என்றல் நாம் கேட்காமலே வலிய வந்து உதவுகிறார்கள்.
எனக்கு தானியங்கி படிகளில் (escalator) இறங்க பயம் சாதாரண படிகளிலேய இறங்கி விட்டேன். பிள்ளைகள் , மருமகள்கள் பேரக்குழந்தைகள் அனைவரையும்  பார்த்ததும் மனம் கொள்ளாத மகிழ்ச்சி.
                    இனி சொந்த கதை சொல்லி படிப்பவர்களை போரடிக்க மாட்டேன்.
இனி நாங்கள் சென்ற ஒவ்வொரு இடமாக சொல்கிறேன்.

No comments:

Post a Comment